திங்கள், மே 29, 2017

ஆடிசிதள யசோதா!

ஆடிசிதள யசோதா!

சிறு வயதில் கேட்ட, மனதுக்குப் படித்த பாடல்களில் 'ஜகதோ தாரணா' என்ற புரந்தர தாசரின் பாடல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. பட்டுக்கோட்டை, மன்னார்குடி வாசத்தில் வீட்டில் வானொலி மட்டும் தான்; தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. மன்னார்குடியில் ஒலிநாடா வாங்கினோம். அப்பா வேலையிலிருந்து வீடு வரும்வரைதான் திரைப்படப் பாடல், இலங்கை வானொலி தயவில். அதற்குப் பிறகு கர்நாடக இசைப் பாடல்கள் தான். கண்ணன் பாடல்கள் என்று வீட்டில் இரண்டு 'டேப்' (ஒலி நாடா).  திரு எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ஒன்று, மற்றொன்றில் வானொலியில் 'இசை அமுதம்' நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து வைத்த கதம்பம். அந்தக் கதம்பத்தில் இந்தப் பாடல், தவிர தமிழில் என்ன தவம் செய்தனை, அலை பாயுதே கண்ணா போன்ற வேறு சில கண்ணன் பாடல்கள். திருமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் ஜகதோ தாரணா என்று கேட்ட போது அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் மனதுக்கு இதமாக இருந்தது. இலங்கை வானொலியில் மாலை ஆறு மணிக்கு மேல் திரை இசை இல்லாத காரணத்தாலும், அப்பாவின் மேலிருந்த பயம் கலந்த மரியாதையினாலும், கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பித்தாலும் நாளாவட்டத்தில் மனது தாமாக இஷ்டப்பட்டு கண்ணன் பாடல்களை கேட்க ஆரம்பித்தது.

2010-ல் இந்தியா சென்ற போது என் அத்தையின் தயவில் அவர்கள் குடும்ப்பத்துடன் பெங்களூருக்கு அருகிலுள்ள அப்ரமேய சுவாமி கோவிலுக்குச் சென்றோம். சென்னப்பட்டனத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தோடா மல்லுர் என்ற இடம். இங்கிருக்கும் கிருஷ்ணர் கோவிலில் தான் புரந்தர தாசர் இந்த 'ஜகதோ தாரணா' என்ற பாடலை இயற்றினார் என்றார் என் அத்தை. காலையில் சென்று, அபிஷேகம் முடித்து, கோவிலிலேயே முழுச்சாப்பாடும் சாப்பிட்டு மதியத்திற்கு மேலேதான் வீடு திரும்பினோம். என் அத்தையில் குடும்பம் இருபது வருடங்களுக்கும் மேலாக பெங்களூரிலேயே வசித்து வருவதால் அவர்களுக்கு கன்னடம் நன்றாகவே தெரியும்; தமிழிலும் ஆர்வம் அதிகமாதலால், இந்தப் பாட்டைப் பற்றி முதல் முறையாக விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். உலகில் உள்ள மற்றவர்களுக்கெல்லாம் தெய்வமாகத் தெரிந்தாலும், யசோதைக்கு கண்ணன் குழந்தைதான் என்ற கருத்தை வைத்து எழுதப்பட்ட ஒரு அருமையான பாடல். 'ஆடிசிதள' என்றால் ஆட்டுகின்ற, ஆட்டிவைக்கின்ற என்ற பொருள். ஒவ்வொரு பத்தியிலும், தெய்வத்தின் உயர்குணங்களைச் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட தெய்வத்தை ஆட்டிவைக்கின்ற யசோதா என்று புரந்தர தாசர் வியக்கின்றார்.

இதே போன்ற கருத்தை ஒட்டி தமிழில் 'என்ன தவம் செய்தனை' (பாபநாசம் சிவன்) பாடல். இந்த விடுமுறையில் எங்கும் வெளியே செல்லாமல், வீட்டில் புத்தகம் படிக்கவும், பாட்டுக் கேட்கவும் (சாப்பாடு, தூக்கம் தவிர) நேரத்தை செலவழித்தேன். இந்த இரண்டு பாடல்களையும் கேட்கையில் இவைகளுக்கு இடையே இருந்த ஒத்த கருத்தையும், அதில் உள்ள வித்தியாசத்தையும் மனது அலச ஆரம்பித்தது. இதே போன்று தினசரி வாழ்க்கையில் ஒருவர் பிரபலமாகும் போது அவர் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளின் உறவில் எந்த மாதிரியான மாற்றம் வரும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.

புரந்தரதாசர் பாடல் முழுவதும் ஒரு விதமான வர்ணனை - அவர் கருத்தில். கண்ணனை குழந்தையாகப் பெற்றதற்கு யசோதை தவம் செய்திருக்க வேண்டும், கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற மாதிரி சொல்லப்படவில்லை. மற்றவர் பார்வையில் கண்ணன் தெய்வம், யசோதைக்கு கண்ணன் குழந்தைதான். பாபநாசம் சிவன் வர்ணனையோடு நிற்கவில்லை - 'என்ன தவம் செய்தனை' பாட்டில் ஒரு விதமான நிர்ணயம் இருக்கிறது. கண்ணனை குழந்தையாகப் பெற்றது கிடைப்பதற்கு அரிய ஒரு பெரிய விஷயம் அதற்கு தவம் செய்திருக்க வேண்டும் என்ற தீர்மானம் தெரிகிறது. இது ஒரு நிச்சயமான விஷயம் தானா என்ற யோசனை வந்தது. முன்னாளில் படித்த ஒரு புத்தகம் 'சங்கர் வேதாந்தம்' எழுதிய "The Hidden Brain".  அதில் 'Spotlight effect' பற்றி அலசியிருக்கிறார்.  அதை படித்தபோது இந்த இரு பாடல்களையும் ஒப்பிட்டு வந்த யோசனை தான் இங்கே.

பாபநாசம் சிவன் எண்ணத்தில் முழு ஆக்கிரமிப்பும் கண்ணன் மட்டும் தான்.  அவர் இந்தப் பாடலை எழுதும் போது அவருக்கு கண்ணனின் பெருமைகள் மட்டுமே அவருடைய spotlight.    எப்படி மேடையில் கதாநாயகி மேல் மட்டும் பிரகாசமான விளக்கின் ஒளி விழும் போது மேடையில் இருக்கும் மற்ற துணை நாயகிகள் கன்னுக்குத் தெரிவதில்லையோ அதே போல அவருக்கு கண்ணனைத் தவிர மற்றவர்களைத் தெரியவில்லை.  அதனால்தான் தீர்மானமாக அவர் 'யசோதை தவம் செய்திருக்க வேண்டும்' என்று சொல்கிறார்.

புரந்தரதாசர் எண்ணம்  வேறு.  அவர் எண்ணத்தில் யசோதையும் இருக்கிறார்.  ஒரு தாய்க்கு மகனின் நலத்தில் இருக்கும் பிடிப்பு, மகனின் வெற்றியில் இருக்கும் பிடிப்புக்கு சமமானது.  தமிழ் இலக்கியங்களில் போர்க்களத்தில் இறந்த மகனுக்கு மார்பில் புண்ணா அல்லது முதுகில் புண்ணா என்று கேட்ட அன்னையைப் பற்றி படித்தாலும், மகன் நலத்தில்தான் அன்னைக்கு  அக்கறை.  அதனால் தான் புரந்தரதாசர் எழுதிய பாட்டில் 'யசோதையின் தவம்' பற்றி அவர் சொல்லவில்லை.  அன்னைக்கு மகனின் வெற்றியும் முக்கியம்; மகன் ஆபத்து இல்லாமல், நலமாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் முக்கியம்.  கண்ணன் வெற்றிகளுக்கு அவன் சந்தித்த ஆபத்துகளும், அவனுக்கு இருந்த பொறுப்புகளுக்கு, சந்தித்த தர்மசங்கடங்களுக்கும் யசோதையின் மனத்தில் நிறைய கவலைகளும் இருந்திருக்க வேண்டும்.  இப்படி ஒரு கதம்பமாக உணர்ச்சிகள் இருக்கையில் தீர்மானமாக 'இது ஒரு பெரிய தவம், பாக்கியம்' என்று சொல்ல புரந்தரதாசரால் முடியவில்லை.  அதனால் தான் அவர் பாடல் வரிகள் 'ஆதிசிதள யசோதா' என்று மட்டும் சொல்கிறது.

ஆட்டிவைக்கின்ற யசோதாவின் மனதில் கண்ணனை வளர்த்தது ஒரு தவமா, பொறுப்பா, கவலையா, என்று யார் தீர்மானமாக சொல்ல முடியும்?

ஞாயிறு, ஜனவரி 27, 2013

வெள்ளி, டிசம்பர் 23, 2011

பேசு மனமே பேசு! - 3

பேசு மனமே பேசு! - 3

ஃபோனில் தொழில்நுட்ப முன்னேற்றம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும், பேசுதல் என்று யோசிக்கையில் முன்னேற்றம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. முதலில் அளவு. இளவயதில் பேசுவதற்கு ஆசை அதிகம்; பேச விஷயமும் அதிகம் இருந்தது. அரை மணி, ஒரு மணி நேரம் பேசிவிட்டு, 'அப்படி என்னதான் பேசினீங்க?' என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், சமாளிப்பதற்காக 'நாங்க என்ன பேசினா என்ன?' என்று எதிர்க் கேள்வி கேட்டுத் தப்பித்ததுண்டு. இப்போது யாராவது தெரிந்தவர் ஃபோன் செய்தால் 'நான் சௌக்கியம்; நீங்க சௌக்கியமா?' என்று கேட்டு ஒரு நிமிஷத்தில் ஃபோனை வைத்து விடுகிறேன். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பேசுவதற்கு விஷயம் அதிகம் இல்லை.

கடந்த இருபது வருடங்களில் அதுவும் குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் குடும்பங்களில் எந்த விதமான விஷயங்கள் செய்தியாக வரும் என்று யூகிப்பதில் தேர்ச்சி வந்து விட்டது. எனக்கு ஞான திருஷ்டி வந்து மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரிகிறது என்று நான் சொல்லவில்லை. யார் யார் எந்தெந்த மாதிரியான விஷங்களைச் செய்தியாக ஃபோனில் கூப்பிட்டு சொல்வார்கள் என்று யூகிக்க முடிகிறது என்று சொல்கிறேன். முதலில் இதில் ஒரு சந்தோஷம் வந்தாலும், நாளாக நாளாக இது ஃபோனில் பேசுகின்ற சுவாரசியத்தைக் குறைத்து விட்டது. இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தவுடன், மற்றவர்களும் நாம் ஃபோன் செய்யும் போது இதே போல சரியாக யூகிப்பார்களோ என்று தோன்ற ஆரம்பித்தது. அந்த மாதிரியான யோசனை வந்ததிலிருந்து நான் ஃபோன் செய்வது குறைய ஆரம்பித்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழியின் பொருள் கொஞ்சம் வேறு விதமாகப் புரிந்தது.

தவிர அலுவலகத்தில் ஃபோனில் பேசுவது அதிகமாகிப் போனது. முதன் முதலாக லிப்டனில் வேலை செய்யும் போது, செலவுச் சிக்கனம் என்று பார்த்துப் பார்த்துப் பேசியது போக இப்போது வேலையில் சகட்டு மேனிக்குப் பேச வேண்டிய கட்டாயம். அதிலும் கடந்த ஆறு/ஏழு வருடங்களில் சராசரியாக தினமும் 3 மணி நேரம் ஃபோனில்! இதில் நான் பேசுவது குறைவு; இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில் செல்லும். முக்கால்வாசி நேரம் இந்த 'கான்ஃப்ரன்ஸ் கால்' என்று ஐந்திலிருந்து ஐம்பது பேர்கள் வரை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒரே ஃபோன் காலில்! வீட்டுக்கு வரும் போது ஃபோன் மணி அடித்தாலே எரிச்சல் வரும்!

இந்த மாதிரியான ஃபோன் கால்களில் மனது பேசுகின்ற விஷயத்திலிருந்து தாவி வேறெங்காவது அலைபாய்வதைத் தவிர்க்க முடியாது. சிலர் குரலைக் கேட்டாலே தூக்கம் வரும்; சில சமயம் சிலரின் பேசும் விதம் நம்மை அறியாமலேயே மற்ற விஷயங்களை யோசிக்க வைக்கும். முகம் தெரியாமல், குரலை மட்டும் கேட்கையில், அதிலும் அனேகம் பேர் பேசும் பொழுது, கவனம் அதிகம் தேவையாக இருக்கிறது; ஆனால் அப்போது தான் மனமும் எங்காவது சென்று விடுகிறது. ஃபோனில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கையில், அவரின் குரல், பேச்சை மட்டும் வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தாமாக வர ஆரம்பித்தது. ஒருவரை நேரில் பார்க்காமல், அவருடன் பழகாமல், அவர் தரம், நாணயம் பற்றி எல்லம் அவர்களின் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும், அந்த மாதிரியான நிர்ணயங்களுக்கு மனது தாமாகச் சென்றது. இதே போன்று என் பேச்சை, குரலை மட்டும் வைத்து என்னைப் பற்றி மற்றவர்கள் எடை போடலாம் என்ற யோசனை வந்ததிலிருந்து தெரியாதவர்களோடு பேச நாட்டம் குறைந்து போனது.

தெரிந்தவர்கள் கூப்பிட்டால் என்ன விஷயமாக இருக்கும் என்ற யூகம்; தெரியாதவராக இருந்தால் அவர் யாரோ? எப்படியோ? என்ற மதிப்பீடு - இரண்டுமே தேவையில்லாதது என்று தெரிந்திருந்தாலும் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்கள் பேசுகையில் எனக்குள்ளேயே நடக்கும் சம்பாஷணையைத் தவிர்க்கத் தெரியாததால், பேசுவதே குறைந்து போனது. நினைத்துப் பார்க்கையில் இளவயதிலும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்ப்பதை விட, நான் பேசுவதில் தான் எனக்கு நாட்டம் இருந்தது. ஆனால் என் பேச்சைக் கேட்க யாராவது வேண்டுமே! அதற்காக அவர்கள் பேச்சை நான் கேட்பது ஒரு விதமான 'கொடுக்க வாங்கல்' விஷயமாகிப் போனது. மற்றவர்களின் பேச்சை கேட்க விரும்பிப் ஃபோன் செய்ததை விட, நான் பேசுவதைக் கேட்க யாராவது வேண்டும் என்பதற்காகப் ஃபோன் செய்தது தான் அதிகம். இப்போது அந்த மாதிரியான எண்ணம் குறைந்து போனதால், நானாக முயன்று ஃபோன் செய்வது குறைந்து போனது.

ஃபோனில் பேச நாட்டம் குறைந்தாலும், நேரில் பார்க்கையில் தெரிந்தவர்களுடன் பேசுவதில் நாட்டம் குறையவில்லை. முகம் பார்த்து நேரில் பேசுவதில் இருக்கும் நிறைவும் திருப்தியும் ஃபோனில் கிடைப்பதில்லை என்பது ஒரு முக்கிய காரணம். இது முன்னேற்றமா இல்லையா என்று தெரியவில்லை. அதே சமயத்தில் கருத்துப் பறிமாற்றம் என்று பார்த்தால் சிறுவயதில் இருந்ததை விட இன்னாளில் அதிகம், இணையத்தின் தயவில். முகம் தெரியாதவர் ஃபோனில் பேசுவதைக் கேட்பதைக் காட்டிலும், எழுதுவதைப் படிப்பது சுலபமாக இருக்கிறது.

மாடு சாப்பிட்டுவிட்டு நிதானமாக அசை போடுவது போல இணையத்தில் எழுதியதைப் படிப்பதில் ஒரு சௌகரியம். ஃபோனில் பேசுகையில் உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இணையத்தில் அந்த நிர்பந்தம் இல்லை. இரவில் தூக்கம் கலைந்து நடு இரவில் வேதாந்தமும் படிக்கலாம் அல்லது அரசியலும் படிக்கலாம். யாரையும் தொந்திரவு செய்ய வேண்டாம். இப்போது என் செல் ஃபோனில் இதைச் செய்ய முடிகிறது. அந்த விதத்தில் முன்னேற்றம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ட்விட்டர் போன்ற தளங்களில், 'எனக்குப் பல் வலி' அல்லது 'கடைக்குப் போகிறேன்' என்றெல்லாம் எழுதுகிறார்கள். நான் தினசரி வாழ்க்கையில் என்ன செய்கிறேன் என்பது பற்றி தெரிந்து கொள்ள யாரும் இருப்பதாகத் தெரியவில்லையாதலால் இன்னமும் அது போன்ற தளங்களில் எனக்கு கணக்கு இல்லை. அதே போல மற்றவர்களின் தினசரி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லாததால் அம்மாதிரியான தளங்களுக்கு அதிகம் செல்வதும் இல்லை. தொழில் நுட்ப முன்னேற்றம் நிச்சயம் மனதை அதிகம் பேச வைத்திருக்கிறது. இந்தப் பேச்சினால் முன்னேற்றம் வந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும் என்றுதான் தோன்றுகிறது.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

பேசு மனமே பேசு! - 2

பேசு மனமே பேசு! - 2

சி.ஏ. படிப்பு முடிந்து ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கிடைத்தது. பதினெட்டு மாதங்கள் டிரெயினிங் - ஊர் ஊராகப் பயணம். முதல் முறையாக மகன் வீட்டை விட்டு வெளியூர் போகிறானே என்ற கவலை அம்மாவிற்கு. சமாதானமாக 'வாரா வாரம் தவறாமல் பக்கத்து வீட்டுக்குப் ஃபோன் செய்கிறேன்' (வீட்டில் அப்போது ஃபோன் கிடையாது) என்று சொல்லி பம்பாய் கிளம்பினேன். அப்போது ஆரம்பித்தது, வாரமொருமுறையாவது ஃபோனில் பேச்சு என்று - இன்று வரை தொடர்கிறது. அம்மாவும், அப்பாவும் என் வீட்டிற்கு வந்து தங்கும் நாட்கள் தவிர, ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இரண்டு நிமிடங்களாவது பேசி விடுவது என்று! பேசுவதற்கு உருப்படியான சமாசாரம் ஏதும் இல்லாது போனாலும் 'உன் குரலையாவது கேட்கணும்டா!' என்று சென்டிமென்டலாக அம்மா சொன்னதால் பதினேழு வருடங்களாகத் தொடர்ந்து வருவதற்கு ஃபோன் தான் காரணம்.

டிரெயினிங் முடிந்து சண்டிகரில் போஸ்டிங். ஒரு வீட்டின் அவுட் ஹவுசில் குடியிருந்தேன். ஒரு சிறு அறை, படுக்கையறை, சமையல் மற்றும் குளியலறை. வேலை நிமித்தம் வீட்டில் ஃபோன், எஸ்.டி.டி. வசதியுடன். நான்காவது மாதம் ஃபோன் பில்லைப் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது - ரூபாய் இருபதாயிரத்துக்கும் கொஞ்சம் அதிகம். பில்லை சரிபார்க்கலாம் என்றால் அந்த நாட்களில் எண்ணிக்கை வாரியாக பட்டியல் கிடையாது. அப்புறம் தான் தெரிந்தது, எஸ்.டி.டி. இருக்கும் வீட்டுக் காரர்கள் தொலைபேசி வாரிய ஊழியர்களை சரியாக 'கவனிக்கவில்லை' என்றால், மற்ற வீட்டு தொலை தூரக் கட்டணமெல்லாம் நம் வீட்டு ஃபோனிற்கு வந்து விடும் என்று. இது பரவலாகத் தெரிந்திருந்த ரகசியமானதால் அலுவலத்தில் பில்லை கட்டிவிட்டு, எஸ்.டி.டி. இணைப்பை மட்டும் துண்டித்து விட்டோம். இந்த பில் தகிடுதத்தம் பரவலாகிப் போனதால், பின் நாளில் எல்லா எக்சேஞ்களையும் மாற்றி, எண் வாரியாக கட்டண விவரம் தரும் முறையைக் கொண்டு வந்தார்கள்.

எண்பதுகளின் இறுதியில் இந்தியாவில் பரவலாக வந்த ஒரு விஷயம் 'எஸ்.டி.டி. பூத்' என்று தனியாரால் இயக்கப்பட்ட தொலை தூர இணைப்பகங்கள். சண்டீகரில் வசிக்கையில் (92-94) இந்த மாதிரியான ஒரு தொலை தூர இணைப்பகத்தில் எனக்கு 'கணக்கு' இருந்தது. நான் வீட்டிலிருந்தே அவர்களுக்கு ஃபோன் செய்து சென்னையின் எண்ணைக் கொடுத்தால் அவர்கள் அங்கிருந்து இணைப்புக் கொடுப்பார்கள். முதலில் கொஞ்சம் 'டெபாசிட்'; பின் மாதா மாதம் அவர்களுக்கான கட்டணத்துடன் 'அக்கவுண்ட்' செட்டில் பண்ண வேண்டும். இந்த முறையில் சேதாரம் அதிகம் இல்லை. 94 மே மாதம் காசியாபாத் (உ. பி.) வரும் வரை இந்த முறையில் தான் தொலை தூர ஃபோன் பேச்சு.

உத்திரப் பிரதேசத்தில் வேறு விதமான பிரச்சனை. அரசு அலுவலக ஊழியருக்கு எப்போதெல்லாம் பணத் தட்டுப்பாடு வருகிறதோ அப்போதெல்லாம் நம் வீட்டு ஃபோன் வேலை செய்யாது. அவர் வந்து கை வைத்ததும் வேலை செய்ய ஆரம்பிக்கும்; அதற்காக அவர் கையில் ஏதாவது வைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நடக்கும் விஷயம் இது. பண்டிகைக் காலங்களில் மாதத்தில் இரண்டு தடவையாவது இந்தத் தடங்கல் வரும். 94 கடைசியில் வேலை மாறி ஆஸ்திரேலியா சென்றேன். சிட்னியிலிருந்து திருச்சிக்கு வாரக் கடைசியில் அம்மாவுக்கு ஃபோன். பரமக்குடியில் முதல் முதலாக அடுத்த தெருவுக்கு தூக்க முடியாமல் தூக்கி மூன்று எண்கள் சுற்றி பேசியதில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பேச எடையும் கயறும் (அதான் சார் wire) இல்லாத ஃபோனில் பத்து எண்கள் அழுத்திப் பேச முடிந்த முன்னேற்றத்தை நான் காண கிட்டத்தட்ட இருபது வருடம் ஆனது.

சிட்னியிலிருந்து திரும்பி டில்லி வந்த போது முதல் முறையாக செல் ஃபோன் இந்தியாவில் அறிமுகம். ஒரு குட்டி செங்கல் அளவு, கனம்; ஆனால் கருப்பு நிறம். அதற்காக தனி பாட்டரி, அதை மின் இணைப்பில் பொருத்தி புத்துயிர் கொடுக்க தனியாக இன்னுமொரு சாதனம். அந்நாளில் தச்சர்கள் மரத்தை இழைப்பதற்காக ஒரு கருவி வைத்திருப்பார்களே, அது போல இருக்கும். நான்கு மணி நேரம் மின் இணைப்பில் வைத்திருந்தால், ஃபோனும் நான்கு மணி நேரம் உயிரோடு இருக்கும்! நாள் முழுவதும் வேண்டுமென்றால், இரண்டு பாட்டரிகளை முதல் நாள் இரவு உயிர்ப்பித்து வைத்திருக்க வேண்டும். இந்த எல்லா உபகரணங்களையும் சேர்த்தால் முன்னாளின் கருப்பு ஃபோன் அளவுக்கு எடை! இருந்தாலும் 'என்னே தொழில்நுட்ப வளர்ச்சி' - எங்கிருந்து வேண்டுமானாலும் பேச முடிகிறதே!

இந்த ஆகஸ்ட் மாதம் கூகுளின் நெக்சஸ் ஃபோன் வாங்கினேன். இதில் பேச மட்டும் செய்ய வேண்டாம். பாட்டு கேட்கலாம்; படம் பிடிக்கலாம்; புத்தகம் படிக்கலாம்; இணையத்தில் மேயலாம். இன்னம் எத்தனை எத்தனையோ விஷயங்கள். ஆனால் தடவிக் கொடுத்துத் தான் வேலை வாங்க வேண்டும். அந்தக் காலத்தில் சினிமாவில் கோபத்தைக் காட்ட வேகமாக ஃபோனை வைப்பார்கள்; இப்போது என்னதான் கோபம் இருந்தாலும் மெதுவாக அழுத்தத் தான் வேண்டும். கையளவே இருக்கிறது; இருந்தாலும் ஏகத்துக்கு வேலை செய்கிறது!! முதல் முதலாக கல் அளவில் பார்த்த செல் ஃபோனுக்கும், இதற்கும் எத்தனையோ வித்தியாசம்; இந்த மாற்றத்திற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்கள்.

பேச உதவும் கருவியில் நாற்பது வருடங்களில் நான் கண்ட முன்னேற்றம் அதிகம். என்ன பேசினேன், யாருடன் பேசினேன் என்பதிலும் நிறைய மாற்றங்கள். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

பேசு மனமே பேசு! - 1

பேசு மனமே பேசு! - 1

ரொம்ப நாட்கள் (வருடம்) தள்ளிப் போட்டு ஒரு வழியாக சென்ற மாதம் புத்தம் புதிதாக ஒரு 'ஸ்மார்ட் ஃபோன்' வாங்கி விட்டேன் - கூகுள் நெக்ஸஸ் - எஸ்! உபயோகிக்க ஆரம்பித்து மூன்று வாரங்களாகி விட்டது; இன்னமும் உபயோகிக்கும் விதம் முழுவதுமாகப் புரியவில்லை. போனில் எக்கச்சக்கமான விஷயங்கள் - இணையத்தில் தேடுவதில் ஆரம்பித்து, புத்தகம் படிக்க, சுடோக்கு விளையாட, வழி தேடி வரைபடம் பார்க்க என்று ஏகப்பட்ட சமாசாரங்கள். இப்படி எதையாவது செய்து கொண்டிருக்கையில், வீட்டிலிருந்து ஃபோன் வந்தால் சடாரென்று எடுத்து பதில் சொல்லமுடியாமல், தட்டுத் தடுமாறி, தடவித் தடவி 'ஹலோ' என்றால் எதிர் முனையில் 'ஃபோனெடுக்க என்ன இத்தனை நேரம்?' என்று கேள்வி! இந்தத் தொலை பேசி, தொல்லைப் பேசியாகி விட்டது.

தமிழில் தொலைபேசி என்ற அழகான வாக்கியம் இருந்தாலும், ஃபோன் என்று சொல்லிப் பழகிவிட்டது. எஸ்.வி. சேகர் ஒரு நாடகத்தில் சொல்லுவார் 'ஓ பிராமிஸ் இப்போது தமிழ் வார்த்தையாகி விட்டதா' என்று; எனக்கு ஃபோன் தமிழ் வார்த்தையாகி விட்டது. இதனால் ஒரு உபயோகம்: வாய்ப்பாடில் வரும், அ, ஆ, இ, ஈ தமிழ் வார்த்தைகளுக்கு (அணில், ஆடு, இலை, ஈக்கள்), ஃ என்பதற்கு அஃது தவிர இன்னுமொரு தமிழ் வார்த்தை சேர்க்கலாம்! நிறைய தமிழ்ப் பிரியர்கள் இது சரியல்ல என்று சொன்னாலும், இந்தப் பதிவில் ஃபோன் என்றே குறிப்பிடுகிறேன்!

என் வாழ்க்கையில் முதல் முதலாக வந்த பரிச்சயம் பரமக்குடியில் இருந்த பெரியப்பா வீட்டு கறுப்பு ஃபோன். தூக்க முடியாத கனம் (அப்போது எனக்கு நான்கு, ஐந்து வயது). பெரியப்பா வக்கீலாக இருந்தார்; வீட்டு போர்டிகோ தாண்டி, அவருடைய வீட்டு அலுவலகம். வீட்டின் முதல் அறைக்கும், அலுவலகத்திற்கும் இடையே ஒரு ஜன்னல். அந்த ஜன்னலுக்கு அருகிலே சிறு மர மேடை; அந்த மேடையில் ஃபோன். ஜன்னலில் கீழ்ப் பாகத்தில் கம்பிகனின் இடைவெளி அதிகம் - ஃபோனின் ரிசிவரை ஜன்னலின் வழியாக எடுக்க வசதியாக இருப்பதற்காக. வீட்டுப் ஃபோனின் எண் 234 - இதை எண்களைச் சுற்றும் தகட்டின் நடுவே பதித்திருப்பார்கள். அந்த ஃபோன் வாசனையே தனி. ஃபோனை இணைத்திருக்கும் வயர் பிளாஸ்டிக் கருப்பு நிறம்; அதை ஒரு விதமான சிகப்பு நிற நூலால் உரை மாதிரி போட்டு சுற்றி வைத்திருக்கும். ஒவ்வொரு எண்ணைச் சுற்றும் போதும் வரும் சப்தமும் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

பெரியப்பாவின் குமாஸ்தா. வேலை விஷயமாக மானாமதுரை, மதுரை என்றெல்லாம் டிரங்கால் போட்டுப் பேசுவார். 'அலோ. அலோ' என்று அவர் அலறுவதைக் கேட்பதே ஒரு தமாஷ் தான்! அவர் பேசுகையில் எதிர் முனையில் என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியாது; ஆனாலும் நானும் என் பெரியப்பா பிள்ளையும் அவர் பேசும் தோரணையை காப்பியடித்து ("அப்படியா?", "ஆமா", "அலோ, அலோ") அவர் இல்லாத போது கற்பனையாக ஃபோன் பேசுவோம். ஒரு தடவை கணம் தாங்காமல் கீழே போட்டு விட்டேன்; நல்ல வேளை உடையவில்லை. இருந்தாலும், அதன் பின்னால் நாங்கள் விளையாட அந்தப் ஃபோனை உபயோகிக்க அனுமதியில்லை. இரண்டு தீப்பெட்டிகளை நூலால் கட்டி கற்பனை ஃபோன் பேசுவோம். பின்னால் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கையில் இந்த ஃபோன் சமாசாரம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிப் புரிந்தது.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி வாசத்தில் ஃபோன் ஒரு அரிதான விஷயமாகவே இருந்தது. மற்ற உறவினர்களுடன் தொடர்பு கடிதம் மூலமாகத்தான். இந்தக் "கடுதாசி" பற்றி தனிப்பதிவு இன்னொரு நாள்! திருச்சியில் கல்லூரியில் படிக்கையில், அப்பாவின் தயவில் ஸ்டேட் பாங்க் வட்டார அலுவலகத்தில் "ஹாட் லைன்" ஃபோன் பார்க்க முடிந்தது. மற்ற வட்டார, தலைமை அலுவலகங்களோடு நேரடித் தொடர்பு கொள்வதற்காக (திருச்சியிலிருந்து மதுரை,சென்னை போன்ற இடங்களுக்கு) நேரடி இணைப்புகள். ஒரு அறையில், போதிய பாதுகாப்போடு (காவலுக்கு ஒருத்தர், எல்லா ஃபோன் கால்களையும் எழுத ஒரு நோட்டு!) வரிசையாக தனித்தனி ஃபோன்கள்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊருக்கு. ஹார்லிக்ஸ் விளம்பரப் பையன் பாணியில் 'சுற்ற வேண்டாம்; அப்படியே பேசிடுவேன்!' வகை. எந்த எண்ணையும் சுற்ற வேண்டாம்; நேரடியாக ரிசீவரை எடுத்தால் அடுத்த ஊரில் மணியடிக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்து சென்னையில் சி.ஏ. படிக்கும் போது தணிக்கை உத்தியோகம். வேலைக்காக மற்ற நிறுவனங்களுக்கு செல்கையில் ஃபோன்களின் அருகாமை அதிகரித்தது. அந்த அருகாமை மற்றவர்களோடு பேச வேண்டும் என்ற தேவையையும் தோற்றுவித்தது. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு விதமான 'பாலிசி'. அனேகமாக எல்லோருமே ஒரு விதத்தில் ஃபோன் உபயோகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இருந்தாலும் 'ஆடிட்டர் ஆபிஸ்' என்ற அந்தஸ்த்தை கிட்டத்தட்ட அனைவருமே துஷ்பிரயோகித்தோம்! நான் சேர்ந்த வருடத்தில் என்னோடு மூன்று பேர்கள் எங்கள் ஆடிட்டரிடம் வேலைக்கு சேர்ந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் - ஒருவர் பாடி,மற்றொருவர் மவுண்ட் ரோடு, இன்னுமொருவர் ஆழ்வார்ப்பேட்டை. மாலையில் எல்லோருமே நுங்கம்பாக்கம் ஹை ரோடில் சி.ஏ. இன்ஸ்ட்டிட்யூட்டில் சி.ஏ. வகுப்புக்கு செல்வோம். தினம் ஒரு முறையாவது ஃபோனில் ஒருவரோடு ஒருவர் பேசுவோம் - ஓசியில் கிடைத்ததால்! அப்போதெல்லாம் 'கான்ஃப்ரன்ஸ்' வசதி கிடையாது. புலி, ஆடு, புல்லுக்கட்டு கதை போல மூன்று, நாலு முறை பேச வேண்டியிருக்கும்!

ஆனால் நினைத்த போதேல்லாம் பேச முடியாது. அனேகமாக ஃபோன், அக்கவுண்டண்ட் மேசையில் தான் இருக்கும். அவர் இல்லாத போது பேசுவது வசதி; அவர் இருந்தால், கொஞ்சம் பேச்சைக் குறைக்க வேண்டியிருக்கும். அவருக்கு கோபம் வந்து ஆடிட்டரிடம் வத்தி வைத்தால் பிரச்சனையாகிவிடும் என்று சீனியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள். இருந்தாலும், ஃபோனின் அருகாமை, பேச்சை அதிகரித்தது. வீட்டில் ஃபோன் இல்லாது போனாலும், மற்ற அலுவலக எண்களைக் குறித்து வைத்துக் கொள்ள முதல் முதலாக டெலிஃபோன் டைரியை உபயோகித்தேன் - 1988ல். அந்த சிறு பாக்கெட் புத்தகத்தில் உள்ள அனைத்து எண்களும் இப்போது மாறிவிட்டது. இருந்தாலும்,சென்டிமென்டாக அந்த அரக்குக் கலர் டைரி இன்னமும் என்னிடம் இருக்கிறது! 89ல் முதல் முதலாக சுற்றும் ஃபோனைத் தவிர, பட்டன் அழுத்தும் ஃபோன் பார்த்தேன்! கனம் குறைவான அதே சமயத்தில் விரைவாக எண்ணை அழுத்த முடிகிறதே என்று ஒரே சந்தோஷம்!

வேலையில் இருக்கையில் வந்த ரூ. 20,000 ஃபோன் பில், முதல் முதலாக 96ல் வாங்கிய'செல் ஃபோன்' (கல்) பற்றி அடுத்த பதிவில்.

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

ஆடல் காணீரோ?

ஆடல் காணீரோ?

இந்த ஆகஸ்ட் மாதம் வித்தியாசமானது.

முதல் வார இறுதியில் மகளுடன் (எட்டு வயது) பத்து நாள் லண்டன் பயணம். என் மனைவியின் அண்ணன் குடும்பத்துடன் (அவர்களுக்கு ஏழு வயதில் பெண்) விடுமுறைக்காக கொஞ்சம் சுற்றலாம் என்று எண்ணிக் கொண்டு போய்ச் சேர்ந்தோம். இரண்டாம் நாள் செஸ்ஸிங்க்டன் சென்று குழந்தைகளோடு சேர்ந்து, உடம்பை ஆட்டி வைத்த விளையாட்டு சமாசாரங்களில் (ரோலர்-கோஸ்டர், ரங்க ராட்டினம், இத்யாதி) சுற்றி விட்டு களைத்துப் போய் வீடு வந்து தொலைக்காட்சியைப் பார்கையில் லண்டன் கலவரம் பற்றிச் சொன்னார்கள். குழந்தைகளோடு சந்தோஷமாக ஆடலாம் என்று பார்த்தால், தெருக்களில் வேறு விதமான ஆட்டம். இரண்டு நாட்களுக்கு வேறு எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம். பொழுது போவதற்காக குழுந்தைகள் இரண்டும் 'வீ' (Wii) பெட்டியின் தயவில் டென்னிஸ், கோல்ஃப் என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தெருக்களில் ஆட்டம் குறைந்ததும், மறுபடியும் சுற்றக் கிளம்பினோம். நாளைக்கு ஒருமுறையாவது மழை வந்தது - அரை மணி அல்லது ஒரு மணி நேரம் மழை பெய்து முடிந்ததும் சில்லென்று காற்றுடன் சுள்ளென்று வெயிலும் அடித்தது. மொத்தத்தில் வருண தேவன், சூரிய தேவன், வாயு தேவன் என்று அனைவரும் கொஞ்சம் விளையாடினார்கள்! இரண்டு நாள் வீட்டிலேயே இருந்தாலும், மற்ற நாட்களில் தினமும் ஆடிக் களைத்ததில் திரும்பி வந்தவுடன் வீட்டில் கொஞ்சம் அமைதி. பத்து நாள் பயணம் பறந்து போனதே தெரியவில்லை.

விமானம் ஏறி மகளுடன் நாடு திரும்புகையில் இறங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் இருக்கையில், இருக்கைப் பட்டியை (seat belt) கட்டிக் கொள்ளுமாறு அறிவித்தார்கள் - காரணம் வெளியே பலத்த காற்றுடன் கூடிய மழை! அதுவரை பறப்பதையே உணரவில்லை, அவ்வளவு சொகுசாக இருந்தது; திடீரென்று செஸ்ஸிங்டன் ரோலர்-கோஸ்டர் போல தூக்கித் தூக்கிப் போட்டது. விமானி திறமையுடன் நூவர்க் வந்து இறக்கியவுடன், பயணிகள் (நானும்தான்) கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சிறு வயதில் இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் நாற்பதாவது ஓவரில் தடுமாறுகையில் வந்த டென்ஷன், பின் ஒரு வழியாக நாற்பத்தொன்பதாவது ஓவரில் வெல்லுகையில் வரும் நிம்மதி கலந்த சந்தோஷம் போல இந்த விமானப் பயணம் அமைந்தது. வீடு வந்து சேர்ந்து இரண்டு நாட்களுக்கு அதிகம் தூங்கி ஆட்டக் களைப்பைப் போக்கிக் கொண்டோம், நானும் என் மகளும்.

மூன்றாம் வாரம் எப்போதும் போல அலுவலக வேலை - இரண்டு வார விடுமுறையில் சேந்து விட்ட விஷயங்களை ஒரு மாதிரியாக முடித்து விட்டு வார இறுதியில் வீட்டில் சேர்ந்த வேலைகளைக் கொஞ்சம் செய்ய முடிந்தது. இருபத்து மூன்றாம் தேதி அலுவலகத்தில் வழக்கம் போல தொலைபேசியில் கதையளந்து கொண்டிருக்கையில் திடீரென்று மேஜை, நாற்காலி எல்லாம் ஆடுவது போல ஒரு பிரமை. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் அவரசமாக வேலைக்கு வந்து விட்டதால் தலை சுற்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், தொலைபேசியில் எதிர் முனையில் சத்தம் - அங்கும் நாற்காலி ஆடுவதாக. அறைக்கு வெளியே சென்று பார்த்தால், மொத்த தளத்திலும் உள்ள சக ஊழியர்கள் எழுந்து ஒருவரை ஒருவர் பீதியுடனும், பிரமிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது அது நிலநடுக்கம் என்று. வாஷிங்டனில் இருந்து பாஸ்டன் வரை உணர்ந்ததாக அப்புறம் தெரிய வந்தது.

வீட்டில் மகளுக்கு ஆயிரம் கேள்வி, நில நடுக்கம் பற்றி. பாதிக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை; இணையத்தில் (கூகுளுக்கு நன்றி) தேடித் தேடி ஒரு வழியாக அவளை திருப்தி செய்தேன். அப்படித் தேடியதில் நான் தெரிந்து கொண்ட சொல்ப விஷயங்கள்: பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் (பூமத்திய ரேகையின் அருகில்) கிட்டத்தட்ட மணிக்கு ஆயிரம் மைல். இது பந்து, அல்லது பம்பரம் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றுவது போல. பூமி சூறியனை சுற்றும் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 66/67 ஆயிரம் மைல்கள்! இந்த வேகத்தில் சுற்றினாலும், அதன் மேலே இருக்கும் கட்டடங்கள், மரங்கள், மலைகள் பூமியிலிருந்து பறந்து போகாமல் ஸ்திரமாக இருக்கின்றன. பூமிக்குள் இருக்கும் கற் படுகைகள் (tectonic plates) கொஞ்சம் திரும்பினாலும், நிலநடுக்கம் வந்து விடுகிறது! ஒரு விதத்தில் பூமியின் ஆட்டம் அபாரம் – அந்தரத்தில், நிற்காமல் அதி வேகத்தில் நடக்கும் ஆட்டம். கொஞ்சம் தாளம் பிசகினாலும், நமக்கு நடுக்கம்தான்!

மகளுக்கு நிலநடுக்கம் பற்றி விளக்கி விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிக் கொண்டிருந்த புயல் பற்றிச் சொன்னார்கள். அது சும்மா கடலிலேயே இருக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை நோக்கி வர ஆரம்பித்தது. எல்லா நிலையங்களிலும் ஐரீன் புயல் பற்றியே பேச்சு - எங்கேல்லாம் போகும், என்ன பாதிப்பு வரும் - ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றியவைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். வட கரோலினா மாநிலத்தில் நாட்டினுள் புகுந்த புயல் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு, வட கிழக்கு என்று நகர்ந்து வந்து கொண்டிருந்தது. சனிக்கிழமை (29) மதியத்திலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. எடிசனுக்குப் புயல் வந்த போது ஞாயிறு அதிகாலை - மிக பலமான காற்று - வீட்டுக்கு வெளியே பெரிய மரங்கள் ஆடுவதைப் பார்க்கையில் பயமாகத்தான் இருந்தது. அவ்வப் போது மின்சாரம் நின்று போனது! வீட்டின் பின்புறம் ஆறு போலத் தண்ணீர். போதாக்குறைக்கு வீட்டு அடித்தளத்தில் (basement) தண்ணீர் வர ஆரம்பித்தது! நான், என் மனைவி, என் மாமனார் என்று ஒரு சிறு குழு; நீரகற்றும் வேலையில் இரண்டு/மூன்று மணி நேரம் செலவழித்து சாமான்கள் சேதமாகாமல் ஒரு வழியாக சமாளித்தோம். சிறு வயதில் வில்லிவாக்கதில் (1975/76 என்று நினைப்பு) புயலினால் ரெட் ஹில்ஸ் ஏரி உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் வந்தது நினைப்புக்கு வந்தது. அப்போது இரண்டு நாளைக்கு மொட்டை மாடியில் கிரசின் ஸ்டவ்வில் பொங்கல் வைத்து சாப்பிட்டோம்! இப்போது அந்த அளவுக்கு தண்ணீர் வரவில்லை என்ற சந்தோஷம்; அதே சமயத்தில் தொலைக்காட்சியில் புயலினால் வந்த சேதத்தைப் பார்க்கையில் வருத்தமும் வந்தது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் எத்தனை விதமான ஆட்டங்கள். மாத ஆரம்பத்தில் மன மகிழ்ச்சிக்காக நாமே முயன்று செய்த, மற்றவர்களுக்கு இன்னல் தராத ஆட்டங்கள் - (ரங்க ராட்டினம், 'வீ' போன்றவை). மற்றவர்களை துன்புறுத்தும் தாளம் தவறிய ஆட்டங்கள் - லண்டன், லிபியா கலவரங்கள். தொலைக்காட்சியில் அடிபட்டு தடுமாறிக் கொண்டிருந்த மாணவனுக்கு உதவி செய்வது போல வந்து அவன் பையில் இருந்தவற்றை எடுத்துக் கொண்டு சென்ற கொடுரம்; க்ராய்டன் பகுதியில் வீட்டை முற்றிலுமாக நெருப்பில் இழந்த குடும்பத்தினரைப் பார்த்ததை நினைக்கையில் இப்பவும் வருத்தம் வருகிறது. இயற்கையின் ஆட்டங்கள் - லண்டனில் ஒரே நாளில், மழை, வெயில், காற்று என்று மாறி, மாறி வந்தது மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அந்த ஆட்டம் ஒரு விதமான நளினமான நடனம் போல இருந்தது. அதே இயற்கை நிலநடுக்கமாகவோ, புயலாகவோ ஆடிய போது பயம்தான் வந்தது. மாத ஆரம்பத்தில் நினைத்தும் பார்க்கவில்லை இந்த மாதத்தில் இத்தனை ஆட்டங்கள் நடக்கும் என்று. இப்போது யோசித்தால், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர் பாலையா சொன்ன 'அடேங்கப்பா! ஆட்டம் ஜாஸ்தியாயிருக்கே!' வசனம் நினைப்புக்கு வருகிறது. இது போன்று எத்தனை விதமான ஆட்டங்களை வாழ்க்கையில் பார்க்கப் போகிறோமோ என்று நினைத்தால் பிரமிப்பும் பயமும் தான் வருகிறது. ஆட்ட நாயகனான தில்லையரசன் தான் தாளம் தப்பாமலிருக்க அருள வேண்டும்.

செவ்வாய், ஜூலை 12, 2011

இலக்கு – 10

இலக்கு – 10

வளர்ச்சி உயிரினங்களின் இயல்பு. தாமாக வளரும் உடலுறுப்புகளையும், அவ்வாறு வளராத திறன்களையும் முயன்று வளர்த்திக் கொள்வது தவறாகத் தோன்றவில்லை. வளர்ச்சியடைவது தவறாகத் தோன்றாவிட்டாலும், எது வளர்ச்சி என்று அறுதியிட்டுக் கூறுவது அவ்வளவு சுலபமான விஷயமாகத் தோன்றவில்லை. காலப் பயணத்தில் முன்பிருந்த நிலையை விட தரம் உயர்ந்தால் அது வளர்ச்சியின் அடையாளம். முன்னாளில் படித்த ஒரு ஆங்கிலப் பழமொழி: ‘Life is change. Growth is optional. Choose wisely.’ "வாழ்க்கை மாற்றங்கள் நிரம்பியது. வளர்ச்சி நம் இஷ்டத்திற்கு விடப்பட்டது. அறிவுணர்ந்து தேர்ந்தெடு!"

கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய 'காலக் கணிதம்' என்ற கவிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
“கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை”.

மனித வாழ்க்கையில் நிரந்தரமான ஒன்று மாற்றம் - அது வளர்ச்சியை நோக்கிச் செல்லாத போது ஏமாற்றம் தான். மாற்றம் இல்லாமல் இருக்க முடியாது. இந்த மாற்றம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் விதமாக நாம் மாற்ற முயல வேண்டும். இலக்காக வளர்ச்சியைக் கருதும் போது ஒரு பொறுப்பு வருகிறது. மாற்றங்கள் விதியின் விளைவு என்று எடுத்துக் கொண்டாலும், அதன் திசையை, வளர்ச்சியைத் நிர்ணயிக்கும் கருவியாக என் முடிவுகள், நடப்புகள் அமைய வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது.

அதே சமயத்தில் எப்படி வளர்கிறோம் என்பது முக்கியமானது. உடலளவில் 'இயக்க ஊக்கிகள்' என்றழைக்கப்படும் ஊக்க மருந்துகள் (Steroids) உடலுறுப்புகளில் உடனடி வளர்ச்சியைத் தந்தாலும் பின்னாளில் அதிகமான உடலுபாதைகளைத் தருவதை நாம் காண்கிறோம். குறைவளிக்கும் பக்க விளைவுகள் தராத வழிமுறைகள் தரும் வளர்ச்சியே உன்னதமானது. முன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:


முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்.

வளர்ச்சி என்று கருதி தவறான வழிமுறைகளை அறியாமல் தேர்ந்தெடுப்பது சகஜம். இதைத் தவிர்க்க அறிவை வளர்ப்பது அவசியம். ஆதலால் இங்கு வளர்ச்சிக்கு அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. எந்த விஷயத்தையும் அறிந்து கொள்ளுதல் தவறு என்று வாதிட முடியாது. என்னைப் பொருத்தவரையில் வளர்ச்சியும் அறிதலும் ஒன்றை ஒன்று ஒத்திப் பிணைந்திருக்கின்றன. இரண்டுமே ஒரு உயிரின் வாழ்வுக்கு அத்தியாவசமானது. இவைகளை இலக்காகத் கொள்ளுதல் தவறில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது: "அறிவு வளர்ச்சி பிறப்பில் தொடங்கி இறப்பில் தான் முடிய வேண்டும்". ‘Intellectual growth should commence at birth and cease only at death.’

இந்த அறிவு வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை சிந்திக்கையில், பாரதியாரின் ஒரு பாடல் - அறிவே தெய்வம் என்ற தலைப்பில் எழுதியது - நினைப்புக்கு வருகிறது.

“ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?”

அறிவே தெய்வம் என்று பாரதி எழுதியதற்கும், 'அனுபவமே தெய்வம்' என்று பொருள் வருமாறு கண்ணதாசன் எழுதியதற்கும் (நீ மணி நான் ஒலி) அதிக வித்தியாசம் இல்லை. அனுபவம் அறிவாக மாறுகிறது. அதே சமயத்தில் அனுபவம் மட்டுமே அறிவாக மாறுவதில்லை. இம்மானுவேல் கன்ட் சொன்னது: 'நம்முடைய அறிவனைத்தும் அனுபவத்தில் தொடங்கினாலும், அனுபவத்தால் மட்டுமே விளைந்ததாகக் கருத முடியாது'. [That all our knowledge begins with experiences, it by no means follows that all arises out of experience – Immanuel Kant in Critique of Pure Reason]. அனுபவத்தால் தோன்றிய அறிவை ஆராய்ந்து, அசைபோட்டு, உறுமாற்றி ஞானமாக்கி வைப்பதும் அறிவுதான்.

முதல் இலக்கான 'வாழ்தல்' சரியா, அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகளை விட இரண்டாம் இலக்கான மகிழ்ச்சி சரியா அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகள் கடினமானதாக இருக்கின்றன. இதைப் பற்றி யோசிக்கையில் என் அறிவு, அனுபவப் பற்றாக்குறை நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பிக்கையில் வளர்ச்சியும் வருகிறது. பதில் தேடும் பயணத்தில், பதில் கிடைக்கையில், அறிவும் வளர்கிறது. மொத்தத்தில் இந்தப் பதிவுத் தொடரை எழுத ஆரம்பித்து, சுய தேடலில் கேள்விகள் கேட்டு, பதில் தேடிப் படித்த புத்தகங்களால் என்னுள் ஒரு வளர்ச்சியையும், அதனால் ஒரு மகிழ்ச்சி வந்ததையும் உணர்கிறேன்.

இந்த அறிவை, வளர்ச்சியை இலக்காக நான் எடுத்துக் கொண்டது தவறு என்று வாதிட எந்தக் காரணமும் தோன்றாததால், இவைகள் சரியான இலக்குகள்தான் என்று கருதுகிறேன். இவைகளை அடையும் முறைகளில் சரி எது என்று யோசிக்கையில், இந்தவிதமான குறிப்பிட்ட முறைதான் சிறந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மாறாக எந்த விதமான செய்கைகளைச் செய்து வளர்ச்சியையோ அறிவையோ பெறுதல் சரியல்ல என்று குறித்துச் சொல்ல முடிகிறது.

வளர்ச்சியாலும், பெற்ற அறிவினாலும் என்னுடைய கடமைகளில் குறைவு வந்தால் இந்த வளரச்சியை, அறிவை அடைந்த முறை சரியான ஒன்றாக இருக்க முடியாது. அதே போல வந்த வளர்ச்சியாலும், அறிவாலும், என்னால் மற்றவர்களுக்குக் கிடைத்து வந்த உதவியும், சந்தோஷமும் குறைந்து போனால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இல்லை; அதை அடைந்த முறை சரியல்ல என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் எந்த விதமான வளர்ச்சியாலும், அறிவாலும் எனக்கு மட்டும் மகிழ்ச்சி வராமல், மற்றவர்களுக்கும் ஆதாயம் (அது அவர்களின் மகிழ்ச்சியாகவோ அல்லது வேறு விதமான உதவியாகவோ இருக்கலாம்) உண்டானால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இருக்கிறது; அதை அடைந்த முறை சரி என்று சொல்லலாம்.

வாழ்தலில் ஆரம்பித்து, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று மொத்தமாகப் பார்க்கும் போது அனைத்திலுமே என்னோடு மட்டும் நின்று விடாமல் மற்றவர்களின் சுக-துக்கங்களையும், இன்னமும் சொல்லப் போனால் மற்ற உயிரினங்களின் வாழ்வு, மகிழ்ச்சி, வளர்ச்சியைப் பேணும் விதமாக என் இலக்கையடையும் வழிமுறைகள் அமைய வேண்டும் என்று புரிகிறது. இந்த இலக்குகளை அடையும் வழிமுறைதான் என் வாழ்க்கை என்று பார்க்க ஆரம்பித்தால் புத்தர் சொன்னது போல பிற உயிர்களுக்கு இன்னல் தராத வாழ்க்கையை நடத்த முடியும் என்றும் தோன்றுகிறது. அம்மாதிரியான வாழ்க்கையில் ஒரு முழுமையையும், திருப்தியையும் அடைய முடியும் என்றும் நம்பிக்கை வருகிறது.

என் இலக்குகளை அடையும் வழிமுறைகள் சரியாக அமைந்து விட்டால் என் மகிழ்ச்சியும் மற்ற உயிர்களின் மகிழ்ச்சியும் ஒன்றாகி விடுகிறது; எனக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு பிணைப்பைப் பார்க்க முடியும். இதனால் 'நான்' என்ற குறுகிய உணர்வு குறைந்து, என் ஒருவனின் சுக-துக்கங்களுக்காக மட்டும் வாழாமல் இருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. இது ஒருவிதத்தில் 'தன்னையே வெல்லும் விதம்'! பாரதியாரின் ஆத்ம ஜெயம் என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:

"என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?"

என் வாழ்வு, என் மகிழ்ச்சி, என் வளர்ச்சி என்று இலக்குகளை வரையறுக்க ஆரம்பித்தாலும், விவேகானந்தர் சொன்னது போல அதை அடையும் முறை பற்றி சிந்தித்ததில் சரியான முறையில் அந்த இலக்குகளை அடைய 'நான்' என்ற உணர்வு குறைவது அவசியம் என்று தெரிகிறது. இதை எந்த அளவுக்கு நான் அடையப் போகிறேன் என்று தெரியாது - காலம் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், இதை எனக்குள்ளே யோசித்து, நானே உணர்ந்ததே ஒரு விதத்தில் திருப்தி தரும் விஷயம். இதுவும் ஒரு வளர்ச்சிதான். இன்னமும் வளர ஆசை!!!

இப்பதிவுடன் இந்தத் தொடர் நிறைந்தது.